திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடி செலவில் திட்டப்பணிகள் தொடங்க இருப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்துசமய அறநிலைத்துறை சார்பில் திருச்செந்தூர் கோயில் திட்டப்பணிக்காக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தங்கும் விடுதிகள், அன்னதான கூடம், முடி காணிக்கை செலுத்துமிடம், வியாபார கடைகள், தீயணைப்பு வாகனங்கள் நிறுத்துமிடம், அவசர ஊர்திகள் நிறுத்துமிடம் மற்றும் யானை பராமரிப்பு கொட்டகை போன்ற வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் நீண்ட நேரம் தரிசனத்திற்கு காத்திராமல் நேர ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் இந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
அன்னதான கூட்டத்தில் ஒரே நேரத்தில் 1000 பேர் உணவு உண்ணும் வகையில் அன்னதான கூடம், பக்தர்கள் காத்திருக்கும் அறையில் தொலைக்காட்சி, கழிப்பறை, குடிநீர் வசதிகள் போன்றவற்றை மேம்படுத்தும் பணிகள் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு, மீன்வள மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு போன்ற உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.